கேரளாவில், அதிர்ஷ்ட இலாபச் சீட்டில், 75 இலட்சம் இந்திய ரூபா வென்ற மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர், அச்சம் காரணமாக காவல்துறையில் தஞ்சமடைந்தார்.
கேரள மாநிலத்தின், எர்ணாகுளம் சோட்டானிக்காரையில் வீதி அமைக்கும் பணியில், கூலி தொழிலாளியாக பணியாற்றும் மேற்குவங்காளத்தை சேர்ந்த படீஷ் என்பவருக்கு அதிஷ்ட இலாபச் சீட்டில் பணம் விழுந்துள்ளது.
நேற்று முன்தினம் இரவு தான் வாங்கிய அதிர்ஷ்ட இலாபச் சீட்டில், 75 இலட்சம் ரூபா பரிசு விழுந்திருப்பதைப் பார்த்து அவர் அதிர்ச்சியடைந்துள்ளார்.
அந்தப் பணத்தை யாரிடம் எவ்வாறு பெறுவது? என்பது தொடர்பில் படீஷ் அறிந்திருக்கவில்லை.
எனினும், இதை எவரிடமாவது கேட்டால், அவர்கள் அதிர்ஷ்ட இலாபச் சீட்டை பறித்துக் கொள்வார்கள் என்ற அச்சத்தில், முவதுபுலா காவல்துறை நிலையத்தில் அவர் தஞ்சமடைந்துள்ளார்.
இதன்போது, குறித்த பணத்தை எடுப்பதற்கான நடவடிக்கைகளை படீஷுக்கு கூறிய காவல்துறையினர், உரிய பாதுகாப்பு அளிப்பதாகவும் உறுதியளித்தனர்.
இதையடுத்து, காவல்துறை நிலையத்தில் இருந்து வெளியேறிய படீஷ், தான் மேற்குவங்காளத்திற்கு செல்ல உள்ளதாகவும், அதிர்ஷ்ட இலாபச் சீட்டில், விழுந்த 75 இலட்சம் ரூபா பணத்தில் மேற்குவங்காளத்தில் புதிய வீடு கட்ட உள்ளதாகவும் கூறியுள்ளார்.