2023 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி 70 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.
மும்பை - வன்கடே சர்வதேச விளையாட்டரங்கில் இடம்பெறும் குறித்த போட்டியில் இந்திய மற்றும் நியூஸிலாந்து அணிகள் மோதின.
போட்டியின், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 397 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
அணிசார்பில் அதிகபடியாக, விராட் கோலி 117 ஓட்டங்களையும், ஸ்ரேயஸ் ஐயர் 105 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
இன்றைய போட்டியில் விராட் கோலி பெற்ற சதத்தின் ஊடாக ஒருநாள் போட்டிகளில் 50 ஒருநாள் சதங்களை பெற்ற முதல் கிரிக்கெட் வீரர் என்ற சாதனையை பதிவுசெய்துள்ளார்.
அத்துடன், உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் ஒன்றில் அதிக அரைசதங்களை பெற்ற வீரர் என்ற சாதனையையும், உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் ஒன்றில் அதிக ஓட்டங்களை பெற்ற வீரர் என்ற சாதனையையும் விராட் கோலி தன்வசப்படுத்தியுள்ளார்.
பந்துவீச்சில் நியூஸிலாந்து அணியின் ட்ரென்ட் போல்ட் மற்றும் ரஷின் ரவீந்திரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இந்தநிலையில், 398 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி 48.5 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 327 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியை தழுவியது.
துடுப்பாட்டத்தில் நியூஸிலாந்து அணி சார்பில் டேர்லி மிட்செல் 134 ஓட்டங்களையும் அணித்தலைவர் கேன் வில்லியம்சன் 69 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
பந்துவீச்சில் இந்திய அணி சார்பில் மொஹமட் ஷமி 57 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.