எதிர்வரும் வாரத்தில் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்க உள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
மாலபே தனியார் மருத்துவக் கல்லூரி தொடர்பில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளாத பட்சத்தில் இந்த பணிப் புறக்கணிப்பு முன்னெடுக்கப்படும் என குறித்த சங்கத்தின் செயலாளர் நவிந்த சொய்சா நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து தெரிவித்துள்ளார்.
மருத்துவ சபை என்பது ஒரு தொழில்நுட்ப நீதிமன்றம் ஆகும்.
மாலபே தனியார் மருத்துவக் கல்லூரி தொடர்பில் ஆராய்ந்த மருத்துவ சபை, மருத்துவ துறை மாணவர்கள் அதில் கல்வி கற்பது பாதிப்பை ஏற்படுத்தும் என அறிக்கையிட்டுள்ளது.
இது தொடர்பில், ஜனாதிபதிக்கும் சுகாதார அமைச்சிற்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மாலபே தனியார் பல்கலைக் கழகத்திற்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதை நிறுத்துமாறு ஜனாதிபதி அறிவித்துள்ளார்.
எனினும், சுகாதார அமைச்சர் அது தொடர்பான தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தவில்லை.
எனவே, மாலபே தனியார் பல்கலைக் கழகம் தொடர்பில், அமைச்சர் தமது நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும் என மருத்துவ சபையின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.